Saturday, January 15, 2011

சொந்த மண்ணையே இழந்து அகதிகளாக அரேபியர்கள்.

 
றுபது ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனர்களுக்கு எதிராக யூதர்கள் நடத்தும் போரில் சொந்த மண்ணையே இழந்து அகதிகளாக அலைய ஆரம்பித்திருக்கிறார்கள் அரேபியர்கள்.
 

இஸ்ரேல் ராணுவம் காசாவின் மீது தினம் பொழியும் குண்டு மழையில் சிதைந்து போன முகத்தோடு ரத்தம் வழிய சின்னஞ்சிறுசுகள் தொலைக்காட்சிகளில் அலறுவதைக் கேட்கவே அடிவயிறு பதறுகிறது. அந்தக் கொலை பூமியில் ஒரு அமைதிப் புறா பறக்காதா என்று ஏங்கித் தவிப்பவர்கள் ஏராளம்!யாசர் அராஃபத்தின் வருகைக்குப் பின்பு புது தெம்பு பெற்ற பாலஸ்தீனியர்கள் அவரது மறைவுக்குப் பிறகு இருட்டில் தள்ளப்பட்டுத் தவிக்கிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் அன்றாடம் படும் கொடுமைகளை உலக அரங்கத்தின் மனசாட்சிக்கு முன்னால் நிறுத்தி நீதி கேட்க ஆசியாவின் 18 நாடுகளைச் சேர்ந்த 500 பேர் ஒரு தரை வழிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். தில்லியில் இருந்து கிளம்பி வாகா எல்லை வழியாக பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து என்று முன்னேறிச் செல்கிறது இந்தப் பயணக்குழு. இதில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர், எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன். அவரது பயணம் எப்படி இருக்கிறது? சிரியாவின் துறைமுக நகரமான லதாக்கியாவில் இருந்தவரிடம் பேசினோம்.

‘‘இதுவரை எட்டாயிரம் கிலோ மீட்டரை சாலை வழியாகவே கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேசம், விதவிதமான மக்கள், முற்றிலும் பழக்கமே இல்லாத புது உணவு, இப்படி உற்சாகமாகப் போய்க் கொண்டிருக்கிறது பயணம்’’ என்றவர், தொடர்ந்தார்...

‘‘ஆசிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் திரட்டிய நிதியின் மொத்தத் தொகை 1 மில்லியன் டாலர். இதில் பாதிப் பணத்தை இந்தியாவில் இருந்து திரட்டி இருக்கிறோம் என்பதே பெருமிதம்தான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒவ்வொரு நாட்டிலும் ஊரிலும் கூட்டங்கள் பேசுகிறோம். குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொள்வதோடு தங்களால் முடிந்த நிதியையும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். பிஞ்சுக்குழந்தைகள் கூட கூட்டத்தில் தொண்டை கிழிய டவுன் டு யு.எஸ்.ஏ. என்று முழக்கமிடும் காட்சி ரொம்பவும் உணர்ச்சிபூர்வமானது’’ என்றார்.

‘‘சிரியா உட்பட பல நாடுகளில் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டு இலங்கை அகதிகளைப் போல இல்லை.ரொம்பவும் மரியாதையாகவும் அரசு வேலைகளில் கௌரவமான உத்தியோகத்திலும் இருக்கிறார்கள்’’என்றவரிடம் உங்களை மனம் நெகிழச் செய்த சம்பவம் உண்டா? என்றோம்.
‘‘நேற்று ஹோட்டலில் எங்கள் குழுவைச் சந்தித்த பெண்மணி, தன்னுடைய தாத்தாவின் காலத்தில் பாலஸ்தீன நாட்டை விட்டு அகதியாக துரத்தப்பட்ட சோகக் கதையைச் சொல்லி கண்ணீர் விட்டார். எங்கள் நாட்டை நாங்களே பார்க்க முடியவில்லை. உங்களுக்காவது அந்தப் பாக்கியம் வாய்த்திருக்கிறதே என்றார். பேசிக்கொண்டே இருந்தவர் தன் கைப் பையில் இருந்து 5000 சிரிய பவுண்டுகளை என் கையில் திணித்தார். நான் மறுத்தேன். இந்தப் பணம் உங்களுக்கு இல்லை. காசாவில் ஏதேனும் ஒரு கஷ்டப்படும் குடும்பத்திற்கு கொடுத்து விடுங்கள் என்றார்.’’ உணர்ச்சி பொங்க பேசுகிறார் முத்துகிருஷ்ணன்.


Thanks to Kumudham.

No comments:

Post a Comment